சனி, 7 மே, 2011


கோடைக்காற்று

காதலியின் பார்வைகளாய் காற்றே வீசு !
கசகசக்கும் உடலினையே தழுவித் தேற்று

நாதங்கள் மீட்டிடுவாய் செடியின் ஊடே !
நாசிக்குள் புகுந்தின்பம் தருவாய் சிட்டே !

ஆதவனின் ஆத்திரத்தில் பகலில் நாங்கள்
அல்லலுற்ற கொடுமைக்கு மருந்தும் நீயே !

பாதங்கள் இல்லாமல் நடந்தே வந்து
பனிமலரின் குளிர்வினையே இரவில் பூசு !


அந்தியிலே உடலினிலே மோதி இன்பம்
அவிழ்க்கின்ற பூஞ்சிறகின் பெயரோ தென்றல் !

சந்திரனை மேகவலை வீசி வீசி
சிறைப்பிடித்து மகிழ்வதுவே உந்தன் வேலை !

மந்திரமா தந்திரமா நீயும் வந்தால்
மனசுக்குள் கவிக்கன்னி தருவாள் முத்தம் !

செந்தமிழின் தாயகமாம் பொதிகை விட்டு
சதிராடி வருபவளைச் சேர்ந்தால் இன்பம் !

சுமந்துவரும் செய்திகளைக் கரைப்பாள் காதில் !
சுகந்தமனம் நெஞ்சடுக்கில் நிறைப்பாள் நாளும் !

அமுதத்தை உடல்பூசி கனவு தேசம்
அழைத்திடுவாள், வாகனங்கள் இல்லா மல்தான் !

சமர்த்தாக காதலரின் இடையில் போவாள் !
சத்தமின்றி அவர்குறும்பை ரசித்துப் பார்ப்பாள் !

சமத்துவத்தை முழுவதுமாய் ஏற்ற தாலே
சாதிமதப் பேதமின்றித் திகழு கின்றாள் !

கவிதை, ஒளிப்படம் - சுகன்



4 கருத்துகள்:

  1. இது என்ன வகையான தியானம்,யோகம்,சித்தி சுகன்?பேனாமனோகரன்.

    பதிலளிநீக்கு
  2. ஐயா இது வரம். தென்றல் எனக்கு கொடுத்த அனுபவம். கோடையில் காற்று காதலியாகி விடுகிறாள். மாலையில் அவள் வீசும் இதத்தில் மயங்கி வந்த கவிதை இது. நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  3. //அந்தியிலே உடலினிலே மோதி இன்பம்
    அவிழ்க்கின்ற பூஞ்சிறகின் பெயரோ தென்றல் !//

    கோடைத் தென்றலின் சுகமே அலாதிதான் சகோ ... பகல் முழுதும் வெக்கை சுமந்து நீரால் கழுவியும் தீரா அக்னியை நம் இரவுத் தோழன் நிலவின் துணையுடன் தென்றலாய் தவழச் செய்திட தணித்து, பிழைத்துக் கிடக்கிறோம் நாமெல்லாம்....!

    பதிலளிநீக்கு
  4. இயற்கை நமக்கு பாதுகாப்பை கொடுப்பதற்கென்று சில ஏற்பாடுகளை செய்து வைத்திருக்கிறது. அதைப் பயன்படுத்த தவற விடுவது நாம்தான். கோடையின் வெப்பத்திலிருந்து தப்பி பிழைக்க தென்றல், சித்திரை நிலவு கல்ல கலவை. நன்றி. நன்றி. - சுகன்.

    பதிலளிநீக்கு