செவ்வாய், 17 மே, 2011


கவலையின் விளிம்பில்

புத்தகங்கள்
வெளியிடப்படும் போதெல்லாம்
கவலை கொள்ளாமல் முடியவில்லை
காடுகள் அழிந்தல்லவா காகிதம்...

ஒவ்வொரு முறை 'புத்தகம்'
வெளியிடும் போதும்
ஒரு மரக்கன்று நட்டு
பரிகாரம் செய்யலாம் !

பூமி நடுங்கி எச்சரிக்கிறது
வீட்டைவிட்டு வெட்ட வெளியில்
கூட்டு வாழ்க்கை
எதிர்காலத்தில் நிகழலாம்

நிழலுக்கும் மறைப்புக்கும்
மரங்கள் அவசியமென
உணர்வது நல்லது !

கிராமங்கள்
அருகிக் கொண்டிருக்கின்றன
தவிர்க்க முடியாததாகிறது
பிளாஸ்டிக் பை !

இன்னும் சில ஆண்டுகளில்
நம் மூச்சுக்குழலுக்குள்
புழங்கக் காத்திருக்கும்
விசம் பற்றிய கவலையற்று
ஓடிக் கொண்டிருக்கிறோம்

எங்கெங்கும் பாலிதீன் கூச்சல்கள்
தேய்ந்து போகும்
நமது வாழ்வின் அர்த்த நாளங்கள்

பிணங்களைச் சுமக்கும்
ஒரு
பாலிதீன் பையாக
பூமி

மரங்களின் அவசியம் பற்றி
எழுதிக் கொண்டே
மரங்களைத் தின்கிறோம்...
இந்தக் கவிதையைப் போல !

செரிப்பதற்கு லாயக்கற்றதா
என்பதைப் பற்றி
யோசிக்காமலேயே
எல்லாம்
நடந்து விடுகிறது !

கவிதை, ஒளிப்படம் - சுகன்.

புதன், 11 மே, 2011


எங்காவது ஒரு மூலையில்

முதிர்ந்த பார்வை
கிரகணம் அகற்றும் !

முழுசாய்
அழுக்கு நீக்கி முடியாது

தொலைந்து கொண்டிருக்கிற
அற்புதங்களுக்கிடையில்
அனுபவம் தேடி
மூச்சு வாங்குகிற
பித்தத்தின் நிழலில்
சிற்பமொன்று
ஒளிந்து கொண்டிருக்கிறது
பழங்காலத்
தீய்ந்த வாசனையோடு !

கடந்து கடந்து ஓடுகிற
என் நெடுவெளிப் பயணத்தில்
பூரணத்துவத்துக்கான
ஒத்திகை
அடிக்கடி நிகழ்ந்து
தோற்கும் !

எங்கோ ஒரு
பிடிபடாத மூலையில்
என்
கேள்விகளுக்கான
சுரப்பு இருக்கலாம்... .. .


கவிதை, ஓளிப்படம் - சுகன்.

சனி, 7 மே, 2011


கோடைக்காற்று

காதலியின் பார்வைகளாய் காற்றே வீசு !
கசகசக்கும் உடலினையே தழுவித் தேற்று

நாதங்கள் மீட்டிடுவாய் செடியின் ஊடே !
நாசிக்குள் புகுந்தின்பம் தருவாய் சிட்டே !

ஆதவனின் ஆத்திரத்தில் பகலில் நாங்கள்
அல்லலுற்ற கொடுமைக்கு மருந்தும் நீயே !

பாதங்கள் இல்லாமல் நடந்தே வந்து
பனிமலரின் குளிர்வினையே இரவில் பூசு !


அந்தியிலே உடலினிலே மோதி இன்பம்
அவிழ்க்கின்ற பூஞ்சிறகின் பெயரோ தென்றல் !

சந்திரனை மேகவலை வீசி வீசி
சிறைப்பிடித்து மகிழ்வதுவே உந்தன் வேலை !

மந்திரமா தந்திரமா நீயும் வந்தால்
மனசுக்குள் கவிக்கன்னி தருவாள் முத்தம் !

செந்தமிழின் தாயகமாம் பொதிகை விட்டு
சதிராடி வருபவளைச் சேர்ந்தால் இன்பம் !

சுமந்துவரும் செய்திகளைக் கரைப்பாள் காதில் !
சுகந்தமனம் நெஞ்சடுக்கில் நிறைப்பாள் நாளும் !

அமுதத்தை உடல்பூசி கனவு தேசம்
அழைத்திடுவாள், வாகனங்கள் இல்லா மல்தான் !

சமர்த்தாக காதலரின் இடையில் போவாள் !
சத்தமின்றி அவர்குறும்பை ரசித்துப் பார்ப்பாள் !

சமத்துவத்தை முழுவதுமாய் ஏற்ற தாலே
சாதிமதப் பேதமின்றித் திகழு கின்றாள் !

கவிதை, ஒளிப்படம் - சுகன்