அவசியம்
அதிர்வுகளின் ஊடே வாழ்க்கை...
ஒவ்வொரு நாளும்
படுக்கப் போகையிலும்
எழுகையிலும்
எது,எப்படி
நம்மைத் தாக்குமோ
என்கிற அச்சத்தைத்
தவிர்க்க முடியவில்லை
ஊடகங்கள்
ஊதிப்பெருத்துக் கிடக்கின்றன
நமது நிம்மதியைக்
கூறுபோட்டபடி
அறிவியல் வளர்ந்து
திமிரெடுத்து அலைகிறது...
மனிதத்தின் உன்னதத்தைக்
கொத்தி, கொத்தி
தன் இருப்பைக் காட்டிக் கொள்கிறது...
அலாதியாய்
பயமற்று
காற்றைப் போல அலைகிற
ஆசை
ஆவியாகிக் கொண்டிருக்கிறது...
எதார்த்தமாய் வாழ
எது தடையாய் இருப்பினும்
உடைக்கலாம்...
எல்லாவற்றையும் விட
அவசியமானது
சுதந்திரம்...
கவிதை, நிழற்படம் - சுகன்.