சனி, 15 ஜனவரி, 2011

தஞ்சை ப்ரகாஷ் - கோபாலியேவிச் குறிப்புகள் நூலுக்கு சுகன் எழுதிய முன்னுரை

தஞ்சை ப்ரகாஷ்

தெய்வ அருளும் சுகமும் (சுகன்) அல்லவா சுகன்?
வாழ்வின் எல்லா அம்சங்களையும் கவிஞனால்தான் ரசிக்கவும்,
உணரவும், உள்வாங்கவும் முடியும் - அதனை நடைமுறைப்
படுத்தாவிட்டால் கவிஞன் வெறும் கலைஞன் மட்டுமே.
வாழ்வின் பொருள் புரியாது, புரிந்தாலும் பின்பற்றாது
கனவைப் பின் தொடர்ந்தால் போதுமா?

இலக்கியத்தின் நோக்கம் சத்தியம் அல்லவா?

- தஞ்சை ப்ரகாஷ் 27-4-1996இல் எனக்கு (சுகனுக்கு) எழுதிய ஒரு கடிதத்தில்...

இயேசுநாதரின் - பிரசங்கங்கள், கதைகள், உரையாடல்கள், அருளாசிகள், அற்புதங்கள், அனுபவங்கள், துன்பங்கள், மகிழ்வுகள், விருந்துகள், மாளாத பசி, ஏமாற்றங்கள், மன்னித்தல்கள், மறந்துபோதல்கள், மௌனங்கள், ஏக்கங்கள், தாபங்கள், தவ்றுதல்கள், வெறுப்புகள், விருப்புகள் துரோகங்கள், ஆசைகள், அர்ப்பணிப்புகள், அன்பு, காமம், இப்படி சகலத்தையும் புரிந்து கொள்ள அவரது மறைவிற்குப் பிறகு அவரது சீடர்களும், அபிமானிகளும் பதிவு செய்து உலகின் கண்களுக்கு ஓட விட்ட குறிப்புகள் உதவுகின்றன...

அது போல ப்ரகாஷ்சுக்கு, அவரோடு பாகியவர்களால் குறிப்புகள் எழுதப்பட வேண்டும் என்பதன் தொடக்கமே... இந்தத் தஞ்சை ப்ரகாஷ் கோபாலியேவிச் சின் குறிப்புகள்.

ப்ரகாஷ்சால் உருவாகியவர்களும், ப்ரகாசிடம் உருகியவர்களும் தங்கள் குறிப்புகளை தரலாம். ப்ரகாஷ் பலதரப்பட்ட மனிதர்களிடமும் பழகியவர். குறிப்பாக பெண்களின் மனசை திறக்கும் சாவியை ப்ரகாஷ் வைத்திருந்தார். ப்ரகாசோடு பழகிய பெண்களை நான் சந்தித்து பேசியிருக்கிறேன்... அவர்கள் அவரைப் பற்றி பேசும்போது, அவர்கள் முகத்தில் தெறிக்கும் ஒளி, ப்ரகாசின் ஒளி. அவர்கள் ப்ரகாஷ் குறிப்புகளை எழுதுவார்களா? மாட்டார்கள். அந்தப் பெண்களில் பலருக்கு வாழ்க்கையை சமாளிப்பதே பெரும்பாடு. அவர்கள் எங்கே தாளைத்தேடி, நேரம்தேடி, எழுதுகோலைத் தேடி பதிவு செய்யப்போகிறார்கள். இலக்கிய வாதிகளே தடுமாறும் போது... அவர்கள் என்ன செய்ய முடியும்?

நான் கூட ப்ரகாஷ் பற்றிய பல குறிப்புகளை எழுதியிருக்கிறேன். அச்சாக்கமும் பெற்றிருக்கிறது. தஞ்சாவூர்க் கவிராயர் இந்தக் குறிப்புகளை போலித்தனம் கலவாத ஒருவித மின்சாரம் பாய தந்திருக்கிறார். அந்தக் குறிப்புகளை வாசிக்கும்போது, அது சொல்லும் நிகழ்வுகளில் நாமும் கூடவே இருந்திருக்கிறோம் போல என்கிற ஒரு தோற்றம் எழுகிறது. அதுதான் இந்தக் குறிப்புகளின் வெற்றி.

ப்ரகாஷோடு என் பழக்கம் அலாதியானது. அவருக்கும் எனக்கும் இடையில் நிறைய முரண்பாடுகள் முளைத்துக் கிடப்பதாக எண்ணி விலகியே இருந்தேன். அவர் நடத்தும் சும்மா கூட்டங்களுக்கு செல்வேனே தவிர, அவரோடு நெருங்குவதில் எனக்கு விருப்பம் இல்லை.

தமிழுக்கும், தமிழ் இலக்கியத்துக்கும் எதிரானவர் என்கிற பேச்சு இருந்தது. அவரோடு பேசி விட்டு வருகிறவர்கள் அவரைப் பற்றி சொல்லும் அபிப்ராயங்கள் எனக்குப் பிடித்தமானதாக இல்லை. ஆனால் தீடிரென எப்படி எங்கள் இருவருக்கும் இடையில் இருந்த தடைகள் காணாமல் போனது என்று தெரியவில்லை. 1985இல் இருந்து அவர் மறையும் வரை, அவரோடு மிக நெருக்கமாகிப் போனேன்.

நான் தேடிச் சென்று மணிக்கணக்கில் பேசியது அவரிடம் மட்டும்தான். ப்ரகாசோடு பழகப் பழகத்தான் அவருடைய அறிவின் ஆளுமையை இரசிக்க முடிந்தது. அவரோடு தொலைந்துப் போன உன்னதங்கள் ஏராளம். காலவெள்ளத்தில் மறைந்துப் போன சிந்துவெவளி நாகரீகம் போல புதைந்துப் போன தனித்துவம் மிக்க நாகரீகம் அவர்.

இப்படி ஒரு மனிதன் வாழ்ந்திருக்கக் கூடுமோ? என்கிற ஐயத்தை உண்டு பண்ணுகின்றன தஞ்சாவூர்க் கவிராயரின் இந்தக் குறிப்புகள். ப்ரகாஷ் வாழ்ந்த வாழ்க்கைக்கு உயிர் சாட்சிகளாக நாங்கள் இருக்கிறோம் என்பது எழும் ஐயங்களை அடக்கும்.

ப்ரகாஷ், தான் வாசிக்கும் நூட்களின் முன் பக்கத்தில் அந்த நூட்களைப் பற்றிய குறிப்புகளை ஆழமாகவும், அரிய தகவல்களோடும், விமர்சனங்களோடும் எழுதும் பழக்கம் உடையவர். அவர் மறைவுக்குப் பின், எலிகளின் மேய்ச்சல் நிலமாய் இருந்த அந்த நூட்களை ஒழுங்குப்படுத்தும்போது அவற்றைப் படிக்க நேர்ந்தது. அவசியம் தொகுக்க வேண்டிய குறிப்புகள் அவை. சிலவற்றை நான் அப்போது அவசர அவசரமாய் எழுதினேன்.

ஆயிரக்கணக்கில் இருந்த அந்த நூட்களில் இருந்து அந்தக் குறிப்புகளை திரட்டுவது என்பது அவவளவு எளிதான செயலும் இல்லை.

அந்த நூட்களை தஞ்சாவூரிலேயே, அவரது பெயரிலேயே ஆய்வு மாணவர்களின் நூலகமாக வைக்க ஆசை இருந்தது. ஆனால் அவற்றை பராமரிக்க சிரமப்பட்ட, ப்ரகாஷின் துணைவியார், எனக்குக் கூட தெரிவிக்காமல் அந்த நூட்களை சென்னையில் உள்ள ஒரு நூலகத்திற்கு கொடுத்து விட்டார்.

அந்த நூலகத்திலிருந்து, பல நூலகங்களுக்கு அந்த நூல்கள் சிதறிப் போய் விட்டதாக தகவல். இனிமேல் அவற்றைத் தேடிப்போய் தொகுப்பது என்பது எளிதான ஒன்றாக இருக்காது. தமிழ் இலக்கியத்தில் பதிவாக வேண்டிய அந்தக் குறிப்புக்களை தவற விட்டு விட்டோமே என்கிற நெருடல் இன்னும் உள்ளத்தில் இருக்கிறது. தஞ்சாவூர்க் கவிராயரின் இந்தக் குறிப்புகளை வெளியிடுவது ஆறுதலாகவும் இருக்கிறது.

ப்ரகாஷ் சுகமான வெயில். அதில் காய்ந்தவர்களுக்கு அதன் அருமை பெருமைப் புரியும். அந்த வெயிலின் இதமும் பதமும் உள் வாங்கியவர்களுக்கு வாய்த்த பாக்கியம். ஒழுங்காக உள் வாங்கியிருந்தால் அது நிச்சயமாய் வெளிப்படும்.

சூரியனிடமிருந்து கவர்ந்த வெளிச்சத்தை நிலவு துப்பியே ஆகவேண்டும். அதை அந்த நிலவே நினைத்தால் கூட ஒளிக்க முடியாது. மறுக்க முடியாது. அது போலத்தான் ப்ரகாசிடமிருந்து பெற்ற அனுபவங்கள். அவை நிமிண்டிக் கொண்டே இருக்கும். அவற்றை சொல்லும்போதும், எழுதும்போதும்... அந்த நிகழ்வுகள் நிகழ்ந்தக் காலத்துக்குள் மீண்டுமொருமுறை புரளும் அதிசயமும் கூடுதலாக கிடைக்கும்.

தஞ்சாவூர்க்கவிராயருக்கு அப்படி ஒரு பரவசம் இந்தக் குறிப்புகளை எழுதும் போது நிச்சயம் கிடைத்திருக்கும். படிக்கும் நமக்கே அது உண்டாகும் போது அவருக்கு வாய்க்காமல் இருந்திருக்குமா?

ப்ரகாஷின் நினைவு நாளில் இதை வெளியிடுவது கூடுதல் இன்பம். தஞ்சாவூர்க் கவிராயரின் அர்ப்பணிப்பான பணி இது. ப்ரகாஷ்சுக்கு அவர் எழுப்பியிருக்கும் காலத்தால் அழியாத தாஜ்மகால் இது. படித்துப் பாருங்கள் ... நீங்களும் உணர்வீர்கள் அதில் வீசி அலைகிற காதல் வாடையை...

தஞ்சை ப்ரகாஷ் கோபாலியேவிச் சின் குறிப்புகள்
- தஞ்சாவூர்க் கவிராயர்
கட்டுரைகள் - ரூ 25
சுகன் பைந்தமிழ்த் தடாகம்,
அம்மாவீடு, சி - 46 இரண்டாம் தெரு, முனிசிபல் காலனி,
தஞ்சாவூர் 613007

வியாழன், 13 ஜனவரி, 2011

கோவில்கள்

மனித மனங்களின்
புலம்பல் முகாம்கள்

இளவட்டங்களின்
மன்மத மடங்கள்

வயதானவர்களின்
வம்பரங்கங்கள்

கலாச்சாரத்தின்
கல் வடுக்கள்

கடவுள்களின்
சிறைச்சாலைகள்

இங்கே
அர்ச்சனை
அலங்கார
தண்டனைகளை
அனுபவித்தபடி
தெய்வங்கள்

கோவில்கள் பல
களையிழந்து
கிடக்கிறதே
காவிரியைப்போல

கோவில் நிலங்களின்
குத்தகைக்காரர்கள்
என்ன
கர்நாடகக்காரர்களா?

ஒரு விதத்தில்
கோவில்களும்
ரசிகர் மன்றங்கள்தான்.
- சுகன்

செவ்வாய், 11 ஜனவரி, 2011


தாஜ்மகால் அழகல்ல
பச்சை
ஆடைகட்டிப்
பளபளக்கும்
வயல் கன்னிகள் முன்
ஓர்
விதவையாய் நிற்கும்
தாஜ்மகால்
அழகல்ல

ஒளிக்கைகள்
பட்டவுடன்
இதழாடை
கழன்றுவிழ
சற்றே
நாணத்தால்
தலைசாய்க்கும்
அல்லிகள் முன்

சலவை ஆடைக்குள்
சல்லாபிக்க
சந்திரனை
துணைக்கழைக்கும்
தாஜ்மகால்
அழகல்ல

காதலிக்காக
எழுத்துப் பூக்களில்
நான்
எடுக்கும்
கவிதை
மாளிகைக்குமுன்
பூமியிலே
முளைத்திருக்கும்
கல்லறைக் காளான்
தாஜ்மகால்
அழகல்ல

ஆமாம்...
அழகல்ல
- சுகன்