திங்கள், 20 டிசம்பர், 2010






வெல்வேன் - கவிதை - சொல்வேன் !


எனக்குள்ளே பாடங்கள் படித்தாள் ! உயிர்த்திரி
எரிந்திடவே காதலைத்தான் வடித்தாள் ! - என்றன்
கனவுகளை நினைவுகளைக் களவாடிச் சென்றவளோ
கரும்பு - மணக்கும் - அரும்பு !


முற்றாத நாற்றாக உருவம் ! - காதல்
மின்சாரம் உருவாக்கும் பருவம் ! - என்னுள்
அற்புதங்கள் விளைக்கின்ற சின்னவளின் புன்னகையோ
மின்னல் - உதட்டின் - பின்னல் !


மல்லிமுல்லை மணமடிக்கும் தேகம் ! - அதரம்
மதுவூறும் பூவினிதழ் பாகம் ! - வெள்ளை
அல்லிமலர் செண்டாக ஆடுகின்ற இளவஞ்சி
அணைப்பு - நெஞ்ச - பிணைப்பு


இடையசைவில் கவியெழுதிச் செல்வாள் ! - காதல்
இருஉயிரின் வேதமெனச் சொல்வாள் ! - உதட்டு
மடைதிறந்தே முத்தவெள்ளம் என்னிடத்தில் கொட்டென்றேன்
சினந்தாள் - பொய் - சினத்தால் !


ஓடிசியேன ஆடுகிற விழிகள் ! - கள்ளை
ஒழுகவிடும் மன்மதனின் வழிகள் ! - சொல்லை
வெடியாக வீசுகின்ற வாலிபத்தின் புயலவளை
வெல்வேன் - கவிதை - சொல்வேன் !


கணினியாய் கவிபாடும் மேனி ! - இதயக்
கற்பூரம் ஏற்றுகின்ற ஞானி ! - இளமைத்
தம்புராவில் சுதிஎழுப்பி மதிமயக்கும் குளிர்மகளால்
தவிப்பு - உயிரில் - தகிப்பு !


நான்பயிலும் கீர்த்தனையே வாநீ! - இரத்த
நாளத்தில் அசைகின்ற தோணி ! - இரவின்
தேன்கனவில் நடமாடி என்னுறக்கப் பூவுதிர்க்கும்
காவியம் - புனையா - ஓவியம் !

- சுகன்