வியாழன், 16 டிசம்பர், 2010



மார்கழி பூ

மார்கழி திங்களை அழகு செய்ய பல உண்டு. அதில் உன்னதமானது கோலம். அம்மா சுசிலா கோலம் போடுவதில் அபார ஞானம் உள்ளவர்கள்.

ஒரு சொர்கவாசல் திறப்புக்கு அம்மா போட்ட கோலம் புதுமையானது.

சொர்கவாசல் வைணவ தொடர்பானது.

அம்மா கோலத்தில் வைணவ குறியீடுகளோடு சிவ குறியீடுகளையும் சேர்த்து நல்லினக்க நோக்கோடு வாசலில் போட்ட கோலமிது.

படைப்புள்ளத்தின் இயல்பான கலகமும் இதில் வெளிப்படுகிறது. கண்ணார களியுங்கள்.
- சுகன்

சனி, 11 டிசம்பர், 2010

திராவகக்கவிஞன்


இழிவு கொண்ட
மனிதர்களை
எச்சரிக்கை
செய்யவே
எழுந்து நிற்கும்
மீசையை
முகவரியாய்
வைத்திருந்தான்
முண்டாசுக்கவிஞன்


பல
நூற்றாண்டுகள்
இருண்டுகிடந்த
தமிழ்க்கவிதை
உலகிற்கு
நவீன வெளிச்சம்
பாய்ச்சிய
மின்சாரக்கவிஞன்


தமிழ் எழுத்துகளை
பாரதி
கவிதையாய்
ஒருங்கினைத்த போது
அவை
ஆயுத மொழி பேசின


தமிழ்க்கவிதைக்கு
தீவிரவாதத்தை
கற்றுக்கொடுத்த
திராவகக்கவிஞன்
பிறந்த நாள்
11 -12 -
- சுகன்

வெள்ளி, 10 டிசம்பர், 2010

வெளிச்சப் புள்ளிகள்

பகலின்
நெகடிவ்
இரவு !

மரம் பொறித்த
அப்பளங்கள்
அடடா சருகுகள் !

உதடுகளின்
சண்டை
உச்சரிப்பு...

மனசில்
மச்சம்
காதல் !

ஜனநாயகக்
காக்கையின் எச்சங்கள்
பாதையோர ஏழைகள் !

முட்களின்
சிநேகிதம்
இரத்த முத்தம் !

பயிரின் தலையில்
தங்கக் கொலுசு
நெற்கதிர்கள்

நிலம்
இருமுகிறது
பூகம்பம் !

மனதுக்கு மசக்கை
கவிதை மாங்காய்
தேடுகிறேன் !

தூக்க
வெளியில்
கனவு மேய்ச்சல் !

உயிருக்கு உயிர்
நீர்வார்க்கிறது
இரத்ததானம் !

பகலின்
தாலி
சூரியன்

வசந்தக்
சுவடுகள்
அவளின் கண்கள்

செடி சூரியனோடு
வியாபாரம் செய்கிறது
ஒளிச்சேர்க்கை

பூமியை
அரைப்பது யார்?
புழுதி !

தேர்தல்
எச்சம்
சுட்டு விரலில் மை !

- சுகன்

வியாழன், 9 டிசம்பர், 2010

கவிமாமணி வெற்றிப்பேரொளி

கவிமாமணி வெற்றிப்பேரொளி

1980௦ களின் மத்தியில் கவிதை எழுத வந்தவர் வெற்றிப்பெரொளி. மரபு. புதிது. ஹைக்கூ என எழுதி தனக்கென்று தனி முத்திரை பதித்தவர். அறுபது வயதை நெருங்கும் கவிஞர் என்று சொல்லி விடமுடியது. உள்ளத்திலும், உடலிலும் இளமையாய் இன்றும் இயங்குவது அவரின் தனிச்சிறப்பு. தன் வீட்டிற்கு "கவிதை" என்று பெயர் வைத்திருக்கிறார்.

1991 - இவரது முதல் கவிதைத் தொகுப்பு "கருப்புநெருப்பு" உவமைக்கவிஞர் சுரதா, இன்றைய வணிகவரித்துறை அமைச்சர் இலக்கியக்காவலர் சி.நா.மீ.உபயதுல்லா அவர்கள் போன்றோர் நிறைந்த அவையில் தஞ்சையில் வெளியிடப்பட்டது. அந்தக் காட்சி நிழற்படமாய் இதோ.

சுகன் தொடங்கப்பட்ட 1987 இல் இருந்து இன்று வரை சுகனில் அவர் எழுதிய கவிதைகள் ஒரு தொகுப்பாய் விரைவில் வரப்போகிறது.

இன்றைக்கு எழுதிக்கொண்டிருக்கிற கவிஞர்களின் தரப்பட்டியல் ஒன்று தயாரித்தால் அதில் நிச்சயம் வெற்றிக்கு இடம் உண்டு.

கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் கையால் கவிமாமணி விருது பெற்றவர். மாநில அரசின் "நல்லாசிரியர்" விருது பெற்றவர். தமிழத்தின் பல இடங்களில், பல அமைப்புகள் பல விருதுகளை கொடுத்து வெற்றிக்கு சிறப்புகளை செய்திருக்கிறது.

தான் வாழும் திருக்குவளையில் "கவிதை வெளி" என்கிற அமைப்பை நடத்தி வருகிறார். அந்த அமைப்பின் சார்பாக அக்டோபர் மாதத்தில் சௌந்தரசுகன் இதழாய்வு கூட்டத்தை நடத்தினார். "பௌர்ணமி" என்கிற வட்ட வடிவ கையெழுத்து இதழை நடத்தியவர். தஞ்சை தமிழ்த்தாய் இலக்கிய அமைப்பின் தலைவராகவும், சுரதா தொடங்கிய உலக தமிழ் கவிஞர் பேரவையின் முக்கிய பொறுப்பிலும் இருக்கிறார்.
- சுகன்









செவ்வாய், 7 டிசம்பர், 2010


சொப்பன நிமிஷங்கள்

அன்றைய
விடியல் சொப்பனத்தால்
வீங்கியிருந்தது
மனசு !

கண்நரம்புகளில்
கரைந்துப்போன
கனவுகளின்
துகள்கள்
இன்னும் ஓட்டிக்கொண்டு

மூளை வெளியில்
கனவுக் கன்னியின்
கால்சுவடுகள்
கனமாய்...

தூக்கத்தின்
அந்தரங்கக்
குகையில்
நிறம் புரியாத
சித்தன்னவாசல்
ஓவியங்கள்...
கலைந்தும்
கலையாமலுமாக
கனவின்
கைங்கரியத்தில் !

கனவுகள்
என்றாவது
கருப்பு வெள்ளையில்
வந்ததுண்டா?

வண்ணக்கலவையின்
சித்திரத்தொடர்
கனவுகள்...

தூக்கப் பத்திரிகையில்
திருப்பங்களுடன்
வெளிவருகிற
ஆழ்மன எழுத்தாளனின்
நாவல்கள் !

கனவின் மூலத்தை
விஞ்ஞானம் இன்னும்
விட்டு வைத்திருக்கிறது
விடுவிக்க முடியாத
விடுகதையைப் போல !

சில
கனவுக் கத்திகள்
சோம்பேறிகலாக்கி
வாழ்க்கைத்
தற்கொலைக்கு
வழிவகுத்துவிடும் !

கனவுகள்
நிரந்தரமானவை
அல்ல !
துளிநேர
சொர்க்கங்கள்

எல்லா கனவுகளும்
நிஜங்களின் பிரதிகள்
அல்ல...
பொய்களின்
பொழிப்புரையும் அல்ல !

கனவுகள்
மாயாபஜார் போல
நம்மை
மயக்கபுரியில்
மிதக்கவிடுபவை...

சொப்பன நிமிஷங்கள்
மனித மயக்கங்களின்
பொர்காலம்தான் !

இனம் புரியா
இனிப்புலகின்
கிளுகிளுப்புகள்தான்!

- சுகன்