ஞாயிறு, 30 அக்டோபர், 2011

மூளைத் திருடி

மூளைத் திருடி


மூச்சிறைக்க
ஓடிவந்த
குழந்தைச் 
சொல்லியது...


"சார்... சார்...
இவன் 
மூளையைத் திருடி
எங்கப்பா வித்து
குடிச்சுப்பிடிச்சு சார்..."


படீரென
எதிர்பாராத
அதிர் வேட்டின்
தாக்குதல் போல்
ஆடிப் போனேன்...


குழந்தை சுட்டிய
இடத்தில்
மாற்றுத்திறன்
மழலையொன்று
உதட்டைப் பிரிக்காமல்
பூ போல மலர்ந்து
நின்றிருந்தது !
                                                                         - சுகன்.

சனி, 29 அக்டோபர், 2011

மனசின் குறுகுறுப்பு

மனசின் குறுகுறுப்பு


வீதி வெளியில்
புர்ண்டலையும்
மின்னல் !


சிதறும்
ஒளித்துணுக்குகளை
மண் துகள்கள்
ருசித்து சிதைத்தன !


இருள் விலகி நின்று
விக்கித்துப் போனது


நடு இரவின்
யாருமற்ற
அந்த வெளியின்
ஏகாந்த அழகை
இரசித்தபடி
அலைந்து கொண்டிருந்தது
தென்றல் !


கண்ணை மூடி
உள்வெளியில்
சலனமுற்று கிடக்கும்
மனசின் குறுகுறுப்பு
அடங்க மறுத்து
நிமிண்டியபடி


                                                                                 - சுகன்

சனி, 17 செப்டம்பர், 2011

எதார்த்தம் - கவிதை

எதார்த்தம்

மென்று
மென்று


உமிழ் நீர்
புரண்டு


அதிர்வுகளை
மட்டுப்படுத்த
நெகிழ்ந்து


ஒரு 
கட்டத்தில்
துப்பப்படுகிற
சூயிங்கம் மாதிரி
எல்லாமும்


- சுகன்

திங்கள், 22 ஆகஸ்ட், 2011

பாழாப்போகட்டும்

வார்த்தைகள்
வன்முறையாய் வெட்டும்

கீச்சாதி பயலுவல்ல
நெட்டநெடிய தலைமுறையே
கூனிக் குறுகும்...

வார்த்தைகளில்
விசம் புதைந்திருக்கம்...


காலால் மூத்திரம் பெய்யிரவ
பேச வந்துட்டா...

சக பாலை இதைவிட
இழிவாய் எள்ளுதல் முடியாதுதானே?

கைலி கட்டியவர்கள்
கோயிலுக்குள் நுழையக்கூடாது

செருப்படி கொடுத்தவனையே
கண்ணப்ப நாயனாராய்
ஏத்துக் கொண்ட தெய்வம்
உள்ளே மௌனமாய்...

பட்டு வேட்டி கட்டியிருந்தாலும்
சூத்திரப் பயல்கள்
கருவறைக்குள்
நுழைய முடியாது
சாமியோவ்...
- சுகன்

வெள்ளி, 3 ஜூன், 2011

தலையங்கம் - சமச்சீர்கல்வி

சமச்சீர் கல்வியை மறுத்து முதல் அதிர்ச்சியை, நாட்டின் பெரும்பான்மையாக இருக்கக் கூடிய, வாக்களித்ததில் பெரும் பங்கு வகித்த ஏழைத்தமிழ் மக்களுக்கும், அவர் தம் குழந்தைகளுக்கும் தந்திருக்கிறது ஜெயலலிதா அரசு.

சமச்சீர் கல்வி தரமற்றக் கல்வி, எல்.கே.ஜி மாணவர்களுக்கு சொல்ல வேண்டிய கல்வியை முதல் வகுப்புக்கு கொடுக்கிறார்கள். பணக்காரர்களை ஏழைகளாக ஆக்கப் பார்க்கிறார்கள். மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி அரசுப் பள்ளிகளைப் போன்று தரம் குறைந்த கல்வியை தனியார் பள்ளிகளும் கொடுக்க வேண்டும் என்கிற நோக்கம் கொண்ட கல்வி, என்று கல்வி வியாபாரிகள் குதிக்கிறார்கள். தடை செய்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துகளை தெரிவிக்கிறார்கள். 200 கோடி மக்கள் பணத்தில் அச்சடிக்கப்பட்ட நூல்களை குப்பையில் போட்டு விட்டு பழைய நூல்களை, பள்ளிகள் திறக்கும் தேதியை தள்ளி வைத்து அச்சடிக்க தொடங்கியிருக்கும் ஜெயலலிதா அரசின் போக்கு கண்டிக்கத்தக்கது.

சமச்சீர்கல்வி நூல்களை தயாரித்தது கருணாநிதியோ அல்லது அவரது வாரிசுகளோ அல்லது தி.மு.க. கழக கண்மணிகளோ இல்லை. அதை தயாரித்தது கல்வியாளர்கள், அறிஞர்கள், தேர்ந்த ஆசிரியர்கள். அதற்காக பல திங்கள்கள் உழைத்து உண்ணாமல், உறங்காமல் அர்ப்பணிப்பு உணர்வோடு வேலை செய்து தயாரித்திருக்கிறார்கள். குறைகள் இருக்கலாம் அவற்றை களையலாம். கருணாநிதியே சொல்வது போல அவரது செம்மொழிப்பாடல்தான் உறுத்துகிறது என்றால் அதை நீக்கிவிடலாம். அடுத்தடுத்த ஆண்டுகளில் தவறுகளை திருத்தி, திருத்தியப் பதிப்புகளை வெளியிடலாம்.

ஆட்டம் என்ற சொல்லுக்குப் பொருள் இதற்கு மேல் பிளக்க முடியாது என்பதுதான். இது அணுவைப் பற்றிய ஆரம்ப காலகட்டங்களில் வைத்தப் பெயர். ஆய்வு செய்து வளர வளர அணுவைப் பிளந்து சாதனை செய்தார்கள். என்றாலும் இப்போதும் அதன் பெயர் ஆட்டம் தான். இது போன்றுதான் இத்தகைய முயற்சிகளும். சமச்சீர் கல்வி என்பது தேர்ந்த கல்வி வல்லுநர்களால் வடிவமைக்கப்பட்டது. ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கானது. நீண்ட நாள் கனவு. அதை தனது அதிகார மனப்பாங்கால் ஒரு உத்தரவில் குப்பைக்கு அனுப்பும் ஜெயலலிதாவின் அரசு வருகிற ஐந்தாண்டுகளில் என்னஎன்னவெல்லாமோ செய்யப் போகிறதோ என்கிற அச்சத்தை கிளப்பியிருக்கிறது என்பதை முதலில் ஜெயலலிதா உணர்ந்து கொள்ள வேண்டும். இல்லை என்றால் அடுத்த ஐந்தாண்டுகளுக்குப் பிறகும் கட்டாயம் தேர்த்ல் வரும்... மக்களின் கையில் வாக்குரிமை தீர்ப்பை எழுத தயாராய் இருக்கும்.

செவ்வாய், 17 மே, 2011


கவலையின் விளிம்பில்

புத்தகங்கள்
வெளியிடப்படும் போதெல்லாம்
கவலை கொள்ளாமல் முடியவில்லை
காடுகள் அழிந்தல்லவா காகிதம்...

ஒவ்வொரு முறை 'புத்தகம்'
வெளியிடும் போதும்
ஒரு மரக்கன்று நட்டு
பரிகாரம் செய்யலாம் !

பூமி நடுங்கி எச்சரிக்கிறது
வீட்டைவிட்டு வெட்ட வெளியில்
கூட்டு வாழ்க்கை
எதிர்காலத்தில் நிகழலாம்

நிழலுக்கும் மறைப்புக்கும்
மரங்கள் அவசியமென
உணர்வது நல்லது !

கிராமங்கள்
அருகிக் கொண்டிருக்கின்றன
தவிர்க்க முடியாததாகிறது
பிளாஸ்டிக் பை !

இன்னும் சில ஆண்டுகளில்
நம் மூச்சுக்குழலுக்குள்
புழங்கக் காத்திருக்கும்
விசம் பற்றிய கவலையற்று
ஓடிக் கொண்டிருக்கிறோம்

எங்கெங்கும் பாலிதீன் கூச்சல்கள்
தேய்ந்து போகும்
நமது வாழ்வின் அர்த்த நாளங்கள்

பிணங்களைச் சுமக்கும்
ஒரு
பாலிதீன் பையாக
பூமி

மரங்களின் அவசியம் பற்றி
எழுதிக் கொண்டே
மரங்களைத் தின்கிறோம்...
இந்தக் கவிதையைப் போல !

செரிப்பதற்கு லாயக்கற்றதா
என்பதைப் பற்றி
யோசிக்காமலேயே
எல்லாம்
நடந்து விடுகிறது !

கவிதை, ஒளிப்படம் - சுகன்.

புதன், 11 மே, 2011


எங்காவது ஒரு மூலையில்

முதிர்ந்த பார்வை
கிரகணம் அகற்றும் !

முழுசாய்
அழுக்கு நீக்கி முடியாது

தொலைந்து கொண்டிருக்கிற
அற்புதங்களுக்கிடையில்
அனுபவம் தேடி
மூச்சு வாங்குகிற
பித்தத்தின் நிழலில்
சிற்பமொன்று
ஒளிந்து கொண்டிருக்கிறது
பழங்காலத்
தீய்ந்த வாசனையோடு !

கடந்து கடந்து ஓடுகிற
என் நெடுவெளிப் பயணத்தில்
பூரணத்துவத்துக்கான
ஒத்திகை
அடிக்கடி நிகழ்ந்து
தோற்கும் !

எங்கோ ஒரு
பிடிபடாத மூலையில்
என்
கேள்விகளுக்கான
சுரப்பு இருக்கலாம்... .. .


கவிதை, ஓளிப்படம் - சுகன்.