செவ்வாய், 7 டிசம்பர், 2010


சொப்பன நிமிஷங்கள்

அன்றைய
விடியல் சொப்பனத்தால்
வீங்கியிருந்தது
மனசு !

கண்நரம்புகளில்
கரைந்துப்போன
கனவுகளின்
துகள்கள்
இன்னும் ஓட்டிக்கொண்டு

மூளை வெளியில்
கனவுக் கன்னியின்
கால்சுவடுகள்
கனமாய்...

தூக்கத்தின்
அந்தரங்கக்
குகையில்
நிறம் புரியாத
சித்தன்னவாசல்
ஓவியங்கள்...
கலைந்தும்
கலையாமலுமாக
கனவின்
கைங்கரியத்தில் !

கனவுகள்
என்றாவது
கருப்பு வெள்ளையில்
வந்ததுண்டா?

வண்ணக்கலவையின்
சித்திரத்தொடர்
கனவுகள்...

தூக்கப் பத்திரிகையில்
திருப்பங்களுடன்
வெளிவருகிற
ஆழ்மன எழுத்தாளனின்
நாவல்கள் !

கனவின் மூலத்தை
விஞ்ஞானம் இன்னும்
விட்டு வைத்திருக்கிறது
விடுவிக்க முடியாத
விடுகதையைப் போல !

சில
கனவுக் கத்திகள்
சோம்பேறிகலாக்கி
வாழ்க்கைத்
தற்கொலைக்கு
வழிவகுத்துவிடும் !

கனவுகள்
நிரந்தரமானவை
அல்ல !
துளிநேர
சொர்க்கங்கள்

எல்லா கனவுகளும்
நிஜங்களின் பிரதிகள்
அல்ல...
பொய்களின்
பொழிப்புரையும் அல்ல !

கனவுகள்
மாயாபஜார் போல
நம்மை
மயக்கபுரியில்
மிதக்கவிடுபவை...

சொப்பன நிமிஷங்கள்
மனித மயக்கங்களின்
பொர்காலம்தான் !

இனம் புரியா
இனிப்புலகின்
கிளுகிளுப்புகள்தான்!

- சுகன்

திங்கள், 6 டிசம்பர், 2010

சுகந்தமே

உனது பார்வை
விசிறியபோது
நான் உனது
விசிறியானேன் !


உன்னைப்
பார்த்தப் பின்புதானே
என் மன்மத சன்னல்கள்
திறந்து கொண்டன !


உனது இமைவிசிறி
அசையும் போதெல்லாம்
என்னுயிருக்குள்
புழுக்கங்கள் !


உனது
வாய் சோலைக்குள்
பற்களாய்
பவலமல்லிகைகளை
பதியம் போட்டது யார்?



எனது கைநார்கள்
கட்டுவதற்கே
சுகந்தம் வழிய
பூத்து வந்தாயோ
புதுமலரே !



உடல் கவர்ச்சியிலே
காதல் உடன்படிக்கை
போட்டவர்கள்
இல்லையே நாம் !


எண்ணப் பந்தல்களில்
மொட்டுவிட்டு
மனமெங்கும்
மல்லிகையாய்
மணந்ததல்லவா?
நம் காதல் !


எனது
கனவு அரங்கில்
உன்னைத்தவிர
வேறுபடங்களை
ஓடவிடுவதில்லை!


எனது சுகந்தமே
உனது முத்தங்கள்
என்ன எலக்ட்ரான்களா?
அவை என்னுள்
மின்னோட்டத்தை
உற்பத்தி செய்தபடி... .. .


இப்பொழுதெல்லாம்
நான்
அதிர்ந்து நடப்பதில்லை
ஏன் தெரியுமா?


நீ எங்கே
வியர்வையாய்
என்னிடமிருந்து
வெளியேறிவிடுவாயோ
என்கிற பயம்தான் !
- சுகன்

சனி, 4 டிசம்பர், 2010

ஒன்றில் மற்றொன்று
உனது
உதடுகள் எழுதுகிற
வார்த்தைகளில்
நான்
வௌவாலாய்
தலைகீழாய்...

நீ
என் பக்கத்தில்
இல்லாதபோது
என் அந்தரங்கம்
அனாதையாகிறது ...

நமது
வாழ்வின்
எல்லா நிமிஷங்களும்
ரசிப்புக்குரியவை

உனக்குள் நான்
மின்சாரமாய்
எனக்குள் நீ
பிரகாசமாய் !
- சுகன்